நீங்க வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கினாலும் தேர்தல் ரிசல்ட் நாமம்தான்.. தீயாய் கணித்த கே.எஸ். அழகிரி..!
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துதான் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக எதிர்க்கட்சிகள் பாஜகவையும் மோடியையும் விமர்சித்து வருகின்றன.
புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாத செயல் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடி வந்தனர். தலைநகர் டெல்லியில் வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மத்திய அரசு பல கட்டங்களாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவர்கள் மசியவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளை சமாதனப்படுத்த முடியாததால், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துதான் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக எதிர்க்கட்சிகள் பாஜகவையும் மோடியையும் விமர்சித்து வருகின்றன. மேலும் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாய அமைப்புகளும் கூறியுள்ளன. இந்நிலையில், இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
“உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்துதான் மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றாலும் கூட 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது. விவசாய சட்டங்களைத் தற்போது திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத செயல்.” என்று கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.