அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறிய வேட்பாளர் தான் திமுகவின் செந்தில் பாலாஜி. அவர் ஒரு பச்சோந்தி.

கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசை கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விஜயபாஸ்கர் மிகச் சிறந்த உழைப்பாளி. உண்மையிலேயே பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். பண்பாளர், அனைவரையும் மதிக்க கூடியவர் அப்படி சிறந்த வேட்பாளர் நம்முடைய கழகத்தின் சார்பாக கரூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றிபெற வைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் ஆதரவாக நீங்கள் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

எம்ஜிஆரும் -ஜெயலலிதாவும் கடவுள்களாக போற்றப்படும் தலைவர்கள். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது, தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவிக்கு வருகிறார்கள் வாழ்கிறார்கள், மறைகிறார்கள். ஆனால், அதிமுக தலைவர்கள் அப்படி இல்லை. மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். திமுக என்றால் அராஜக ஆட்சி. திமுகவின் ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டால் பலர் வேலை இழந்தனர். கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி திமுக. கரூரில் விலைமதிக்க முடியாத நிலம் இருந்தால் அதுவும் அது திமுகக்காரன் கண்ணில் பட்டால் அதை காப்பாற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி. தலைவர்கள் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் நான். இங்கு மக்கள்தான் முதலமைச்சர். அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் செந்தில்பாலாஜி. ஐந்து கட்சிக்கு மாறிய வேட்பாளர் தான் திமுகவின் செந்தில் பாலாஜி. அவர் ஒரு பச்சோந்தி. அவரை நம்பி ஏமாற வேண்டாம். சட்டமன்றத்திலும் பொதுக் கூட்டத்திலும் ஸ்டாலின் விமர்சித்த செந்தில் பாலாஜி இன்று புகழ்ந்து பேசுகிறார். கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசை கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி”என கடுமையாக விமர்சித்தார்.