மதுவுக்கு எதிராக போராடிய 243 பேர் மீது வழக்கு - ஈரோடு போலீசார் நடவடிக்கை
மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மதுபானக் கடைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அண்மையில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 3200 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்கப்பெற்று வந்த வருவாயில் 25 சதவீதம் இழப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும், வயல்வெளிகளிலும் மதுக்கடையை திறக்க அவசர கதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய மக்களை தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியது.
போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் மதுவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் உள்பட 200க்கும் அதிகமானோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.