இனி பெண்ணை தொட்ட நீ கெட்ட... கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்கிய ஈபிஎஸ்.. என்ன தெரியுமா?
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலுவுவதாக குற்றம்சாட்டிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் தொடர்ந்து கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அதிமுக சார்பாக குற்றம்சாட்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுக பொறுப்பேற்றத்தில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது,ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடைபெறுவதாகவும்,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சுழ்நிலை உள்ளதாகவும், அதை திமுக அரசு தடுத்து நிறுத்த தவறிவிட்டது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம்சாட்டியிருந்தார்.
பெப்பர் ஸ்ப்ரே வழங்கிய இபிஎஸ்
இந்தநிலையில் சென்னையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஇஅதிமுக சார்பில் கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்க இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுவதாக கூறினார். தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நாளுக்கு நாள் கூட்டு பாலியல் பலாத்காரமும், சிறுவயது பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே பெண்கள் தாங்களே தங்களை தற்காத்து கொள்வதற்காக பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.