டிடிவி தினகரனுக்கு ஆதரவு தந்த 3 எம்எல்ஏக்களை ஒதுக்கிதள்ளிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்.. தேர்தலில் போட்டியிட சீட்டு மறுப்பு!
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிறகு எடப்பாடியுடன் கைகோர்த்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதேபோல டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இதன்பிறகு இவர்கள் மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் மூவருக்கும் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை அனுமதி வழங்கவில்லை. இதேபோல பல்வேறு சந்தர்ப்பங்களில் குடைச்சல் கொடுத்து வந்த பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்துக்கும் தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கப்படவில்லை.
அதேவேளையில் அதிமுக கட்சிலிருந்து ஒதுங்கி இருந்தவரும் அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்காதவருமான சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.