நம் வாழ்வின் அங்கம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்... மீண்டும் பாட வர வேண்டும்.. கனிமொழி விருப்பம்!
எந்தக் குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக இசைத் துறையின் பாடு நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்புக்காக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாற்றப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து நேற்று முதலே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டு வர திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அவர் நலம் பெற வேண்டும் என்றுதங்கள் விருப்பத்தையும் பிரார்த்தனையையும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்திவருகிறார்கள். இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற திமுக எம்.பி. கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
அதில், “லட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்.பி.பி. இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. .எந்தக் குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்தக் குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்தக் குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும்” எனக் கனிமொழி தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.