தனித்தனியா வேண்டாம் !! ஒரு மினி சட்டமன்றத் தேர்தலயே நாங்க எதிர்பார்க்கிறோம் !! ஸ்டாலின் அதிரடி வேண்டுகோள் !!
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெயியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கனவே நான் சொல்லி இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது என்றும் , தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க, திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற நாடளுமன்ற தேர்தலுடன் இணைத்து மினி சட்டமன்றத்தேர்தல் என்று சொல்லுமளவுக்கு காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில்
இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை தான் கேட்டுக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.