election commission strict action for rk nagar by election
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரைகளை கண்காணிக்க 9 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்ததிலிருந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்த தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த முறை போல் பணப்பட்டுவாடா செய்யப்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வெளியூரிலிருந்து தேவையில்லாமல் வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லவோ நிறுத்தப்படவோ கூடாது, மாலை 5 மணிக்கு மேல் காலை 9 மணிவரை வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது போன்ற அதிரடி கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வீதிக்கு ஒரு துணை ராணுவப்படை வீரரை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் கணிகாணிப்பு பணிக்காக 9 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுப்பார்வையாளர், செலவின பார்வையாளர், காவல் பார்வையாளர் என 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் குழுவை ஒருங்கிணைப்பது மற்றும் வழிநடத்தும் பணியை பொதுப்பார்வையாளரும் தேர்தல் பரப்புரைகள், செலவினங்கள் குறித்து செலவின பார்வையாளர்களும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக காவல் பார்வையாளர்களும் கண்காணிப்பர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவைப்பட்டால், கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
