தமிழகத்தில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல்... பகீர் கிளப்பும் தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் 319.02 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலக்கபட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவை நடைபெறுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த சிறப்பு படையுடன் வருமான வரித்துறையின் 400 அதிகாரிகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சத்யபிரதா சாகு: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். இதுவரை 89,185 அரசு ஊழியர்கள் தபால் மூலமாக தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் 319.02 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.81.70 கோடியில் வருமான வரித்துறை ரூ.60.58 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சேலத்தில் ரூ.44.47 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.