இரட்டை இலை சின்னம் யாருக்கு...? - இன்று மதியம் இறுதி முடிவு
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல்களுடன் இந்த அணிகள் செயல்பட்டு வருகின்றன.
இருதரப்பிலும் முதலமைச்சர் பதவியை யார் பிடிப்பது என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 12ம் தேதி நடக்க இருந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னம் வேண்டும் என இரு தரப்பினரும், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதுகுறித்த விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. இதன் இறுதி விசாரணை மற்றும் முடிவு இன்று மதியம் நடக்க இருக்கிறது.
இதில், ஓ.பி.எஸ். தரப்பினரும், டிடிவி.தினகரன் தரப்பினரும் விசாரணைக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், மீண்டும் சசிகலா அணியுடன் சேர்ந்து ஒரே அணியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது. இதற்கான ஐவர் குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது புகார் எழுந்துள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.