சட்டப்பேரவை தேர்தல் பணிக்கு ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்: வரைவு வாக்காளர்பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 18 பூர்த்தி அடைந்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக நவம்பர்-3 அன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2021 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும் 2020 நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 18 பூர்த்தி அடைந்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.