election commission asking list of campaigners in r.k. nagar
ஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தலில் பரப்புரை செய்யும் தலைவர்கள் பட்டியலை வரும் 23 தேதிக்கு முன்பே தர வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும், கூட்டணி கட்சிகள் அமைப்பதிலும், பரப்புரை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக தரப்பில் சசிகலா அணி, ஒ.பி.எஸ் அணி, தீபா அணி என மூன்று பிரிவாக கோதாவில் குதிக்க இருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தாமே வேட்பாளராக நிற்க உள்ளதாக அறிவித்து விட்டார்.
சசிகலா அணியும், ஒ.பி.எஸ் அணியும் வேட்பாளர்கள் யாரை நிறுத்தவது என ஆலோசித்து வருகின்றனர். மேலும் ஒ.பி.எஸ் அணி கூட்டணி கட்சிகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
தேமுதிக சார்பில் மதிவாணனை வேட்பாளராக அறிவித்துள்ளார் விஜயகாந்த். திமுக வேட்பாளர் குறித்த நேர்காணல் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரைக்கு வரும் தலைவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பயண செலவில் சலுகை பெற பரப்புரை செய்யும் தலைவர் பட்டியலை 7 நாட்களுக்கு முன் தர வேண்டும்
பரப்புரை செய்யும் தலைவர்கள் பட்டியலை வரும் 23 ஆம் தேதிக்கு முன்பு கட்சிகள் தர வேண்டும்.

பட்டியல் தராவிடில் தலைவர்களின் பயணச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு 40 முறை பயண கட்டண சலுகை வழங்கப்படும்
அங்கீகரிக்கபடாத கட்சிகளுக்கு 20 முறை பயண கட்டண சலுகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
