”நாங்கள் யாரும் பாஜகவுக்கு அடிமை இல்லை” – சூடான செங்கோட்டையன்…
நாங்கள் யாரும் பாஜகவுக்கு அடிமை இல்லை எனவும், குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததில் தெளிவாக உள்ளோம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தற்போது ஒ.பி.எஸ், இ.பி.எஸ், டிடிவி என மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது.
எடப்பாடி தரப்புடன் இணைய வேண்டுமானால் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு விலக்க வேண்டும் என ஒபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக எடப்பாடி அமைச்சரவை முடிவு எடுத்து அறிவித்தது. ஆனால் டிடிவி முதலில் அமைச்சரவையின் முடிவை ஆமோதித்தாலும் பின்னர் எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டு விலக முடியாது என அதிரடியாக அறிவித்தார்.
இதனால் எடப்பாடி தரப்புடன் இணைவதாக இருந்த பன்னீர் தரப்பு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டது.
இதைதொடர்ந்து எடப்பாடி டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்துகொள்ளவும் முடியாமல் வெளியே தள்ளவும் முடியாமல் தவித்து வருகின்றார்.
எது எப்படி இருந்தாலும் குடியரசு தலைவர் தேர்தலில் மூன்று அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கே ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு தமிழக எதிர்கட்சிகள் பாஜகவின் பினாமி ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நாங்கள் யாரும் பாஜகவுக்கு அடிமை இல்லை எனவும், குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததில் தெளிவாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.