முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் அளிப்பது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கிண்டல் செய்துள்ளார்.

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். அப்போது, முதலமைச்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா , டாக்டர் பட்டம்தான் தற்போது மலிவாக அனைவரும் வாங்கி வருகிறார்களே? என்று கலாய்த்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், எல்லோரும் டாக்டர் பட்டம் வாங்குவதால் முதலமைச்சருக்கு வழங்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. தமிழகத்தின் முதலமைச்சராக அவர் இருந்துவருகிறார். சாதாரண ஆட்களுக்கே டாக்டர் பட்டம் வழங்கப்படும் நிலையில், முதலமைச்சருக்கு வழங்குவதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது என்று தெரிவித்தார்.

சீமான் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, பிரச்சார நேரத்தில் மறைந்த தலைவர்கள் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமானதுதான். இதுபோன்றுதான் கமலும் பேசிவருகிறார். 

சீமான் கருத்து ஏற்கமுடியாத ஒன்று. இருந்தாலும் அவருடைய கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.