பறி போகும் அமைச்சர் பதவி.... முதல்வர் எடப்பாடி அதிரடி முடிவு
விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதவிக்கு செம்மலை முயற்சி செய்கிறார். ஆனால் முதல்வரே சுகாதாரத்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்துக்கொள்ளவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதவிக்கு செம்மலை முயற்சி செய்கிறார். ஆனால் முதல்வரே சுகாதாரத்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்துக்கொள்ளவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் உள்ள டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 40 இடங்களில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 40 இடங்களில் சோதனை நடந்துள்ளது.
இந்நிலையில், விஜயபாஸ்கரின் மீது அடுக்கடுக்கான லஞ்சப் புகார்களும், மீதும் சிபிஐ ரெய்டு நடவடிக்கையாலும் கடுப்பில் இருக்கும் எடப்பாடியார் அமைச்சர் பதவியை பறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பதவிக்கு செம்மலை முயற்சி செய்கிறார். ஆனால் முதல்வரே சுகாதாரத்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்துக்கொள்ளவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடத்தில் இருந்து கணக்கில் வராத 20 லட்சம் ரூபாயும், விஜயபாஸ்கரின் உதவியாளர் ஆன்லைன் மூலமாக மேற்கொண்டிருந்த சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கும் அவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் விசாரணையின் போது அந்த பணம் லஞ்சமாக வந்தது தான் என்று விஜயபாஸ்கரின் தந்தையும், விஜயபாஸ்கரின் உதவியாளரும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, அதற்கான ஆதாரங்களுடன் தமிழக தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் பெற்றதை விஜயபாஸ்கரின் தந்தையே ஒப்புக் கொண்டிருப்பதால் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை சார்பில் அந்த கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் கடுப்பில் இருக்கம் எடப்பாடி அமைச்சர் பதவியிலிருந்து தூக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.