மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து பேசியது, அக்கட்சியில் குழப்பம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களில் உள்ள பயன்களைப் பட்டியலிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார். அந்த மசோதாக்களை ஏன் அதிமுக ஆதரிக்கிறது என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று வேளாண் சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த மசோதாவில் மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என விசித்திரமான இரட்டை நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தங்கள் சுயநலத்துக்காக இப்படி நடந்துகொண்டதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் அறிக்கைக்கு மாறாக பேசிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் மீது அதிமுகவினரின் கோபப் பார்வைத் திரும்பியுள்ளது.

