"அணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்" : சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆற்றின் நீர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்தடைகிறது. இந்த நிலையில் ஆந்திர அரசு லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் தொடங்கியுள்ளது.
28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த அணைகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும்பட்சத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தநிலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கு தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்த பிறகே ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.