லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. வலதுகரம் இளங்கோவனுக்காக வாய்திறந்த எடப்பாடி…
இளங்கோவன் இல்லத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை: இளங்கோவன் இல்லத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
திமுக பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் 4 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி அதிரடி காட்டியது. சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் இல்லத்திலும், அவர்களது உறவினர்கள் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருக்கிறது.
இந் நிலையில் இந்த சோதனையை கண்டித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:
கழக தலைமை மீது மிகுந்த விசுவாசம் கொண்டு சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் இளங்கோவன் கழக செயல்பாடுகளை முடக்கும் வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலன் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து அவைகளை சாதனைகளாக்கி வெற்றி நடைபோடும் பேரியக்கம் ஆகும்.
இதனை அழிக்க நினைக்கும் திமுக அரசின் தொடர் முயற்சிகள் தொண்டர்களின் நல்லாசியுடன் முறியடிக்கப்படும் என்று கூறி உள்ளார்.