தி.மு.க தலைவர் ஸ்டாலின் – ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசிய போது துரைமுருகன் கூறிய சில வார்த்தைகள் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மாலை நான்கு மணிக்கு ஸ்டாலினுடன் சந்திப்பு என்கிற தகவல் வைகோவை எட்டிய போது நேரம் செவ்வாய் கிழமை இரவு பத்து மணியாக இருந்தது. உடனடியாக தனது உதவியாளர்களை அழைத்து ஸ்டாலினை தான் சந்திக்க உள்ள தகவலை ஊடகங்களுக்கு கொடுக்குமாறு வைகோ கேட்டுக் கொண்டார். இதன் பிறகு ம.தி.மு.க தரப்பில் இருந்து ஸ்டாலினை வைகோ புதன்கிழமை மாலை 4 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல்கள் பறந்தன.

ஆனால் ஊடகங்கள் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு கிராஸ் செக் செய்த பிறகே சந்திப்பு தொடர்பான தகவலை வெளியிட்டன. மாலை நான்கு மணிக்கு சந்திப்பு என்று கூறியிருந்தாலும், ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்படவே ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. காலையில் அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டம் குறித்து நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் பிறகு வீட்டுக்கு சென்றவர் சாப்பிட்டுவிடடு ஓய்வெடுத்துவிட்டு வர 5 மணியை தாண்டியது.

இதனால் சந்திப்பு 5.30 மணிக்கு பிறகே இருக்கும் என்று தி.மு.க தரப்பில் இருந்து ம.தி.மு.க தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு சுமார் 6 மணி வாக்கில் சந்திக்கலாம் என்று ஸ்டாலின் தகவல் அனுப்ப தனது அண்ணா நகர் வீட்டில் இருந்து 5.15 மணிக்கெல்லாம் வைகோ புறப்பட்டுவிட்டார். தன்னுடன் ஒரு பெரிய பட்டாளத்தையே அழைத்துக் கொண்டு அறிவாலயத்திற்கு வந்த வைகோவை தி.மு.க நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



வழக்கமாக சால்வை எடுத்துச் செல்லும் வைகோ ஸ்டாலினை சந்திக்கும் போது வெறும் கையுடன் தான் சென்றார். ஸ்டாலினை பார்த்ததும் இரண்டு கைகளை பற்றிக் கொண்டு எப்படி இருக்கிறிர்கள் என்று நலம் விசாரித்துள்ளார் வைகோ. நன்றாக இருப்பதாக கூறிய ஸ்டாலின் சிறிது தள்ளி நின்ற துரைமுருகனை அருகே வருமாறு அழைத்துள்ளார். அப்போது நான் இல்லாமலா? என்னால் தானே இந்த சந்திப்பே என்று கமென்ட் அடிக்க வைகோ உள்ளிட்ட அனைவருமே சிரித்துவிட்டனர். ஆனாலும், நொந்து போய் தேடி வந்த மனுஷனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், இருந்துவிட்டு இப்படி கலாய்த்து தள்ளலாமா? அப்படி என்னதான் தப்பு செஞ்சாரு எங்க தலைவரு என மதிமுகவினர் துரைமுருகனிடம் கேட்காமலேயே வந்துள்ளனர்.