சட்டப்பேரவையில் துரைமுருகனுக்கு முதன் முறையாக கிடைத்த புதிய பொறுப்பு..!
தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதன் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அவை முன்னவர் என்ற பதவியை ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தை வகிப்போருக்கு அவை முன்னவர் பதவியை ஒதுக்கிவிடுவார்கள். 2011-இல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். 2016-இல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோதும் ஓ.பன்னீர்செல்வமே அவை முன்னவராக நியமிக்கப்பட்டார்.
2017-இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானபோது, அதிமுக பிளவுபட்டிருந்ததால், செங்கோட்டையன் அவை முன்னவராக நியமிக்கப்பட்டார். பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, அமைச்சரவையில் ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு, மீண்டும் அவை முன்னவரானார். இந்நிலையில் தற்போது திமுக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவை முன்னவராக அமைச்சரவையில் இரண்டாமிடத்தை வகிக்கும் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1989,1996, 2006 என மூன்று முறையும் கருணாநிதி ஆட்சி அமைந்தபோது, அன்று அமைச்சரவையில் இரண்டாமிடத்தை வகித்த க.அன்பழகன் அவை முன்னவரானார். தற்போது துரைமுருகன் அவை முன்னவராகியிருப்பதன் மூலம், முதன் முறையாக அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.