தலைமை தவிக்குது... உ.பி.,க்கள் குதிக்குது... பெண் இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் திமுக பிரமுகர் அட்ராசிட்டி..!
இவர்களை போன்றவர்களை தலைமை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் திமுகவுக்கே அவப்பெயர் ஏற்படும் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.
ஊரடங்கில் வெளியே சுற்ற வேண்டாம் வீட்டுக்கு போங்க என கூறிய பெண் காவலரிடம் ’எங்கள் ஆட்சி அப்படித்தான் சுத்துவேன்’என வாக்குவாதம் செய்து மிரட்டிய பொங்கலூர் திமுக ஒன்றிய செயலாளர் ரவியால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. பத்து ஆண்டுக்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுகவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவலாக அமைந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன், துறைசார்ந்த ஆட்சியர்களை நிர்வகிப்பது, திட்டமிடுவது என ஒவ்வொரு காரியங்களாக பார்த்து பார்த்து செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இதனால் மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறார். அவரின் இந்த செயல்பாடுகளை எதிர்கட்சியினரே பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நாட்களில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பயங்கரமாக தாக்குவதால் அதனைக் கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் பெருமக்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஊரடங்கு விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியில் அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திமுகவை சேரந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் குடிபோதையில் காரில் வந்துள்ளார்.
காரை நிறுத்தி வாகன சோதனை செய்த போலீசார் முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த ரவியிடம் கவசம் அணியாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஏன் வெளியே சுற்றுகிறார்கள் என கேட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த திமுக பிரமுகர் ரவி பெண் காவல் ஆய்வாளர் கோமதியிடம் "நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம் கேஸ் போடறதுனா போட்டுக்கோ" என தனது வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருடன் வந்த நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதும் திமுக பிரமுகர் ரவி ஆபாச வார்த்தைகளால் தனது நண்பர்களையே அர்ச்சனை செய்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அவிழ்ந்த வேட்டியோடு காரில் அமரவைத்து அவரது நண்பர்கள் அவரை அழைத்துச் சென்றனர். இவர்களை போன்றவர்களை தலைமை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் திமுகவுக்கே அவப்பெயர் ஏற்படும் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.