வரைவுக் கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள யோசனைகளில் எவ்வளவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது? மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல. 

புதிய கல்விக்கொள்கையில் அளிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் எத்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதை அறிவிக்காமல் அதற்கு முன்பாக மத்திய அரசே தன்னிச்சையாக புதிய கல்விக் கல்விக் கொள்கையை வெளியிடுவது முறையல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.


மத்திய பட்ஜெட்டில் புதிய கல்விக்கொள்கை விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரம் சார்ந்த புதிய அறிவிப்புகளுடன் கல்வி சார்ந்த அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்பதுதான் அது. மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு தேவையற்றது.
இந்தியக் கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் தாக்கல் செய்தது. அன்றே அந்த அறிக்கை பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வரைவுக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த அவகாசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், ஆலோசனைகளும் பெறப்பட்டன. அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலனை செய்ததா? அவற்றின் அடிப்படையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டனவா? என்பது தெரியவில்லை. தொடக்கக் கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி அளவில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற ஒரு சில நல்ல திட்டங்கள் வரைவு தேசியக் கொள்கையில் இடம் பெற்றுள்ள போதிலும், மீதமுள்ள பெரும்பான்மையான திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.