கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது. 

மூன்று மாதங்கள் இ.எம்.ஐ. சலுகை விஷயத்தில் அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதுதான் அறமே தவிர, அவனுக்கு செய்த உதவிக்கான தொகையை வட்டி போட்டு வசூலிப்பது அறம் அல்ல என்று வங்கிகளை விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


“கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு அணுகுமுறையைக் கடைபிடிக்கின்றன. சில வங்கிகள் தாங்களாகவே கடன் தவணையை ஒத்திவைத்துள்ளன. இன்னும் சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் எழுத்துபூர்வமாக விண்ணப்பித்தால் மட்டுமே கடன் தவணையை ஒத்திவைக்கின்றன. ஆனால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான தொகைக்கு, கடன் செலுத்தி முடிக்கும் காலம் முழுமைக்கும் வட்டி செலுத்தியே தீர வேண்டும் என்று வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதில் மட்டும் அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையை கடைபிடிக்கின்றன.


கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது. அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதுதான் அறமே தவிர, அவனுக்கு செய்த உதவிக்கான தொகையை வட்டி போட்டு வசூலிப்பது அறம் அல்ல.
எனவே, இந்த பிரச்சினையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31&ஆம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு ஆணையிட வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.