ஹாட் நியூஸ்.. முதல்வரை சீண்டும் டாக்டர்..? “பொய்சொல்லி ஆட்சிக்கு வந்துட்டாய்ங்க! அவிய்ங்கள தூக்கணும்!!”
கடுப்பாகியிருக்கும் தி.மு.க. “பா.ஜ.க.வின் விழுதாகவே மாறிவிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி எங்களை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.” என்கின்றனர்
தமிழக அரசியலின் கடந்த சில தலைமுறை வி.ஐ.பி.க்களில் படித்தவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவர்கள் பதவியில் கோலோச்சி கோடி கோடியாய் சேர்த்ததோடு, தங்களின் வாரிசுகளை விருப்பப்படி படிக்க வைத்தனர். அந்த வாரிசுகள் பலர் கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலுக்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசியலில் படித்தவர்கள் பதவியிலிருப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நபர்கள் ‘கைசுத்தம் மற்றும் வாய்சுத்தம்’ ஆகியவற்றை மெயின்டெயின் செய்கிறார்களா? என்று கேட்டால்…தலையை சொறிய வேண்டியுள்ள நிலை.
ஆனால், சீனியர் அரசியல்வாதிகளில் இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் புதிய தமிழக கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் கிளினிக் வைத்திருப்பதும், குடியிருப்பதும் கோயமுத்தூரில் ஆனால் அரசியல் செய்வதெல்லாம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில்.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலினத்தில் இருந்து நீக்குவதற்காக அதிக வாய்ஸ் கொடுத்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனாலும் அவர் மீது ‘அடிக்கடி கூட்டணி தோள் மாறுபவர்’ எனும் விமர்சனமுண்டு.
சில காலங்களுக்கு முன்பெல்லாம் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் கூட சமீப வருடங்களில் பா.ஜ.க.வுக்கு மிக நெருக்கமானவராகவும், அந்த ரூட்டில் அ.தி.மு.க.வை சப்போர்ட் செய்பவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, தி.மு.க.வை செம்ம காண்டாக்கி இருக்கிறது.
டாக்டர் வெளியிட்ட டார்கெட் அறிக்கையின் ஹைலைட்டு இதுதான் ….”கடந்த ஆண்டில், பூர்வீக குடிமக்களின் அடையாளத்தை மீட்டுக் கொடுத்து, யாரும் செய்யாத சாதனையை நம் கட்சி செய்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை 2021ல் தான் பெற்றோம், இதற்காக அரசியல் தளத்தில் காயமும் பட்டோம். காயங்கள் ஆறும், மாறியும் போகும். ஆனால் பெற்ற வெற்றி மட்டும் நிலைத்து நிற்கும்.
இந்த புதிய ஆண்டில் நமக்கு முன்பாக பெரிய சவால்கள் உள்ளன. மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அதேவேளையில், பொய் வாக்குறுதி தந்து, ஆட்சியில் அமர்ந்திருப்போரை அம்பலப்படுத்தி, அவர்களை அகற்ற வேண்டிய தலையாய பொறுப்பு, கடமை நமக்கு இருக்கிறது.” என்று நெத்தியடியாய் பதிவிட்டுள்ளார்.
டாக்டரின் இந்த சாடல், “இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் தருவோம்! என்று தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்தில் சொல்லியது. ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஏழு மாதங்களாகியும் இன்று வரையில் அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதுதான் மக்களை ஏமாற்றி பதவிக்கு வரும் செயல்.” என்று அ.தி.மு.க. கொந்தளிப்பதற்கு இணையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டாக்டரின் விமர்சனத்தால் கடுப்பாகியிருக்கும் தி.மு.க. “பா.ஜ.க.வின் விழுதாகவே மாறிவிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி எங்களை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.” என்கின்றனர்.
ஆஹாங்!