ஓபிஎஸ் சொந்த ஊரில் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக... தேமுதிக, அமமுக ஆதரவால் அதிர்ச்சியில் அதிமுக..!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை அமமுக, தேமுதிக ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.
2019-ல் நடைபெற்ற தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 16 வார்டுகளில் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக, அமமுக தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. அமமுக உறுப்பினர் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக திட்டமிட்டது. ஆனால், திமுக சார்பில் வெற்றி பெற்ற 8வது வார்டு உறுப்பினர் செல்வம் அதிமுகவுக்கு ஜூட் விட்டார். இதனால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைந்தது.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பல முறை திட்டமிட்டப்பட்டது. ஆனால், ஆனால் அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாகவே இருந்தன. இந்நிலையில் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடிப்படையில் மறைமுகத் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதனடிப்படையில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்.15ல் நடந்தது.
இந்தத் தேர்தலில் தேமுதிக, அமமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுக கவுன்சிலர் தங்கவேல் தலைவராக வெற்றி பெற்றார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம் ஆகும். அங்கே அமமுக, அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக ஆதரவுடன் திமுக தலைவர் பதவியைக் கைப்பற்றியது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.