அதிமுக செய்த தவறை திமுக ஒருபோதும் செய்யாது... உறுதி கொடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.!
அதிமுக அரசு தவறு செய்ததால்தான் மக்கள் திமுகவை தேர்வு செய்திருக்கிறார்கள். அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் மீது உரிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகின்றன. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிறைய பயனாளிகளை சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு வழங்கப்படும் மனுக்களை தள்ளுபடி செய்யாமல் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை பட்டா மாறுதல் தொடர்பாக அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்யவும், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்கவும் உத்தரவிடப்பட்டது.
நில எடுப்பு விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள விஏஒ மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் உத்தரவில் முதல்வர் விரைவில் கையெழுத்துதிடுவார். அதன் பின்னர் நில எடுப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். தற்போதைய திமுக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. அதிமுக அரசு தவறு செய்ததால்தான் மக்கள் திமுகவை தேர்வு செய்திருக்கிறார்கள். அதிமுக செய்த தவறுகளை திமுக செய்யாது” என்று கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.