ராகுல் பிரதமர் ஆகணும்னுதான் திமுகவுக்கு ஓட்டு போட்டாங்க ! இடைத் தேர்தல் தோல்வியால் காண்டான காங்கிரஸ் !!
தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு என திமுக கூட்டணிக்குள் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆகணும்னுதான் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர் என காங்கிரஸ் கட்சியினர் கொளுத்திப் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு, தி.மு.க., கூட்டணியில், புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 21ல் இடைத்தேர்தல் நடந்தது. கூட்டணி பலத்துடன், இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., களம் இறங்கியது. அதை எதிர்த்து, விக்கிரவாண்டியில், தி.மு.க.,வும், நாங்குநேரியில் காங்கிரசும் களமிறங்கியது. இரு கூட்டணியிலும், லோக்சபா தேர்தலில் இருந்த கட்சிகளே இடம் பெற்றன.
ஏப்ரலில் நடந்த, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஒரு தொகுதியில் மட்டுமே, வெற்றி பெற்றது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதமும், பெரும் சரிவை சந்தித்தது.இதனால், தி.மு.க., வினர் உற்சாகம் அடைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, தி.மு.க.,வுக்கு கிடைத்த ஆதரவு என்றே, அக்கட்சி தலைமை கருதியது.எனவே, திமுக இடைத்தேர்தலில்,கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் கூட்டணி கட்சி தலைவர்களை தேடிச் சந்தித்து, அமைச்சர்கள் ஆதரவு கேட்டனர்..இதன் காரணமாக, இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது; அதன் ஓட்டு சதவீதமும் அதிகரித்தது.லோக்சபா தேர்தலில், பிரமாண்ட வெற்றி பெற்ற, தி.மு.க., கூட்டணி, இரு தொகுதிகளிலும், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து தி.மு.க., கூட்டணியில், இடைத்தேர்தல் தோல்விக்கு, யார் காரணம் என்ற விவாதம் நடக்கிறது. இடைத்தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்தனர்; கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அதனால், தோல்விக்கும், அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்கிறது, கூட்டணி வட்டாரம்.
ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகத்தில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி தங்களுக்கு கிடைத்த வெற்றியாக, தி.மு.க., கருதியது. அது தவறு என்று தற்போது காங்கிரஸ் கட்சியினர் கொளுத்திப் போட்டுள்ளனர்.
.இனிமேலாவது, தி.மு.க., தலைமை தன் நிலை உணர்ந்து, கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என, கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்பார்க்கின்றன.