DMK victory in the next 3 months is coming to Tamil Nadu

இன்னும் 3 மாதத்தில் தமிழகத்திற்கு தேர்தல் வரும் அதில் திமுக வெற்றி வெறும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதே முதல் வேலை எனவும் தெரிவித்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்றிலிருந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில், ஆர்.கே நகரில் மருது கணேஷுக்கு ஆதரவாக ஸ்டாலின் 3வது நாளாக பரப்புரை மேற்கொண்டுள்ளார். 

அப்போது பேசிய அவர் இன்னும் 3 மாதத்தில் தமிழகத்திற்கு தேர்தல் வரும் அதில் திமுக வெற்றி வெறும் என தெரிவித்தார். 

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதே முதல் வேலை எனவும் குறிப்பிட்டார்.