வேலூர் திமுக எம்.எல்.ஏ. சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..!
திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 300 பேர் விலகி, முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 300 பேர் விலகி, முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
மக்களவை தொகுதியான வேலூரில் தேர்தல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 கட்சியினருமே தற்போது தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகியுள்ளனர். அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளதால் ஏ.சி. சண்முகம் கேம்ப் மிகவும் உற்சாகத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டப்பேரவைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள தனியார் விடுதியில் அவரது முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் திமுக எம்.எல்.ஏ. காத்திகேயனின் சகோதரர் பெருமாள், அவரது அண்ணன் மகன் மற்றும் அமமுக மாவட்ட செயலாளர் மற்றும் வாசு, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மஸ்தான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் திமுக கூவி கூவி அழைத்தாலும் அந்த கட்சியில் யாரும் இணையமாட்டார்கள் என்று விமர்சித்தார்.