காங்கிரஸை எகிறியடித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி: 7 தமிழர் விவகாரத்தில் உச்ச கட்ட கருத்து மோதல்...
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தில் அரசியல் கட்சி முகவர்களின் துணையுடன்தான் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும், கூறினார்.
7 பேர் விடுதலையில் திமுகவின் தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளதாலேயே அக் கட்சி கூறும் கொள்கை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தில் அரசியல் கட்சி முகவர்களின் துணையுடன்தான் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும், கூறினார். ஆனால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு வார்டுகளில் திட்டமிட்டு திமுக வாக்காளர்களை பட்டியலில் இருந்து அதிமுக வார்டு முகவர்கள் நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ,இது போன்ற முறைகேடுகள் செய்யவே கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளதாவும் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். தேர்தல் வரவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் தங்களது தில்லுமுல்லு வேலைகளை தொடங்கிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
7 பேர் விடுதலை தொடர்பாக கே.எஸ்.அழகிரி கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவின் கருத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், அரசியல் கூட்டணி வேறு, கொள்கை வேறு, ஏழு பேர் விடுதலையில் எங்கள் நிலைப்பாட்டை திமுக தலைவர் தெரிவித்துள்ளார் என்றும், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதை தெரிந்து தான் திமுக ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தியதாகவும்,ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.