அமித்ஷா கோபமே ப.சிதம்பரம் கைதுக்குக் காரணம்... ப.சி. கைது விவகாரத்தில் அமித்ஷா மீது திமுக அட்டாக்!
கைது செய்யப்படுவதற்கு முன்பு ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ காட்டிய விவகாரமும் ப. சிதம்பரத்தின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன.
ப. சிதம்பரத்தின் கைதுக்கு அமித்ஷா என்ற தனிமனிதரின் கோபமே காரணம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் எங்கே இருக்கிறார் என 24 மணி நேரம் தெரியாத நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பிறகு அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ காட்டிய விவகாரமும் ப. சிதம்பரத்தின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ப. சிதம்பரத்தின் கைது குறித்து கூட்டணி கட்சியான திமுக மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான டி.கே. எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். “ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ப. சிதம்பரத்தின் கைதுக்கு அமித் ஷா என்ற தனி மனிதரின் கோபமே காரணம்.” என்று டி.கே.எஸ். இளங்ங்கோவன் தெரிவித்துள்ளார்.