குட்கா விவகாரத்தில் கூட்டுக் கொள்ளை... ஆதாரத்தோடு லிஸ்ட் போட்ட எதிர்கட்சி தல...
குட்கா விவகாரத்தில் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றது உண்மை என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளதால் அவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவையிலிருந்து வெளியில் வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அ நான்கு நாட்களாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஐந்தாவது நாளான இன்று குட்கா விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி தராததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளியில் வந்த ஸ்டாலின் ஆதாரம் வைத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது “குட்கா வழக்கு தொடர்பாக வருமான வரித் துறையினர் நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர் .அதில், ‘குட்கா விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ. 56 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய டிஜிபியாக இருந்த அசோக்குமாரின் அசல் கோப்புகளும் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
குட்கா விவகாரத்தில் வருமான வரித் துறையினர் உண்மையான தகவல்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட எதிர்கட்சி தலைவர், “எனவே, அன்றைய சென்னை கமிஷனரும் தற்போதைய டிஜிபியுமான ராஜேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல், விஜயபாஸ்கரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் முதல்வர் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்“. இது தொடர்பாக பேரவையில் பேச முயன்றபோது அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது தொடர்பாகப் பேசக் கூடாது என சபாநாயகர் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.