அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டும். – திமுகவின் திட்டம் இதுதான்
அஇஅதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக மட்டுமல்ல, அசைக்க முடியாத முதலமைச்சராகவும் மாறி இருந்தார் ஜெயலலிதா. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என கடந்த 6 ஆண்டுகளாக எதை தொட்டாலும் ஜெயலலிதாவுக்கே வெற்றி.
ஜெயலலிதாவின் தொடர் வெற்றிகளால் துவண்டேபோனது திமுக. கடந்த மாதத்தில் நடந்த சட்டமன்ற இடை தேர்தரல் 3 தொகுதிகளிலும், திமுக மண்ணை கவ்வியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட ஜெயலலிதாவின் மரணம், தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடத்தை அமைத்துள்ளது.
இதுபோன்று பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்தும் தலைவர் அல்லது முக்கிய நிர்வாகி இறந்துவிட்டால், ஒன்று உட்கட்சி குழப்பம் ஏற்படும் அல்லது எதிர்க்கட்சியினர் உள்ளே புகுந்து குட்டையை குழப்புவர்.
சமீப காலமாக அதிமுகவுக்குள், குட்டையை குழப்ப திமுக எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போனதால், அதுபோன்று எந்த வேலைகளிலும் ஈடுபட வேண்டாம் என தற்போது திமுகவினர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதிமுகவின் தற்போதைய தலைமையான வி.கே.சசிகலவுக்கு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடையே அதிக ஆதரவு உள்ளது. ஆனால், அடிமட்ட அதிமுக தொண்டர்கள் இடையே தான் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே அடிமட்ட தொண்டர்களிடம் சிறிது சலவலப்பு ஏற்பட்டுள்ளதால், அதிமுக வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதை விடுத்து, எதிர் விளைவுகள் உண்டாக்க கூடிய எந்த வேலையும் செய்ய வேண்டாம் என தமது கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் ஒரு மாத காலத்துக்கு உற்று நோக்கிவிட்டு, அதன் பிறகு ஏற்படும் அரசியல் நிகழ்வுகளை வைத்து அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்து செல்வதே திமுகவின் தற்போதைய திட்டமாகும். எனவே, அதிமுகவினர் அடித்து கொள்ளாமல் இருந்தால் போதும். ஆட்சிக்கு எந்த பங்கமும் ஏற்படாது.