சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மனு ! திமுக அதிரடி !!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சட்டப் பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் கொறடா தாமரை ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து இன்று சபாநாயகர் தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு அந்த மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பாக 3 பேரும் ஒரு வாரகாலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் இன்று திமுக மனு அளித்துள்ளது.
திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்பி ஆலந்தூர் பாரதி மற்றும் கிரிராஜன் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சார்பில் மனு அளித்தனர்.