உழவர்களை உள்ளம் மகிழவைத்த வேளாண் துறை அமைச்சர்... அதிரடியாய் போட்டுடைத்த அறிவிப்புகள்...!
தற்போது வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ள விஷயங்களை விவசாய பெருமக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பதவியேற்ற முதல் நாளே கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை, அரசு பேருந்துகளில் மகளிர் பயணிக்க இலவசம், மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்துறை என அதிரடியாக 5 கேப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதே வழியில் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும், கொரோனாவை பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, போக்குவரத்து துறை ஆகிய அமைச்சர்கள் ஆய்வு, ஆலோசனை, அதிரடி அறிவிப்புகள் என அசத்தி வரும் நிலையில், தற்போது வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ள விஷயங்களை விவசாய பெருமக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தமிழகத்தில் புதிதாக 120 புதிய உழவர் சந்தைகள் திறக்கப்படும் என தெரிவித்தார். தோட்டக் கலைத்துறை சார்பில் தமிழகத்தில் 24 செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் செம்மொழிப் பூங்கா, உழவர் சந்தைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினார். அதேபோல் தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் 8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் உறுதி அளித்து, உழவர் பெருமக்களை உளம் மகிழ வைத்துள்ளார்.