இலங்கை தமிழர்களுக்கு திமுகவும் ,காங்கிரசும் துரோகம் செய்தது உறுதியாகி உள்ளது - உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு பின் வைகோ பேட்டி
தனக்கு எதிரான வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டது மூலம் திமுகவும், காங்கிரசும் இலங்கை இனப்படுகொலையில் குற்றவாளிகள் என நிருபணமாகி உள்ளது என வைகோ தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்று ஒன்றரை மணி நேரம் பேசினேன். ஈழத்தில் லட்சோப லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட ஆயுதபலமும், முப்படைகளின் பலத்தையும் கொடுத்து துரோகம் செய்தது இந்திய அரசு தான். லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதற்கு முழுக்க முழுக்க துரோகம் இழைத்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான். இந்த படுபாதக படுகொலைகள் நடந்தபோது திமுக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தது.மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது.
இதில் முழு முதல் குற்றவாளிகள் மத்திய அரசும் , காங்கிரஸ் அரசும் என்று குற்றம் சாட்டினேன். இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு பதிவு செய்யப்படும் போது திமுக தலைவர் கருணாநிதி தான் முதல்வராக இருந்தார். இதுவரை 112 முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
6 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். பெரும்பாலும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். இந்த வழக்கில் இருந்து என்னை நீதிபதி விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் தேச விரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்துள்ளனர்.
ஈழத்தமிழர் படுகொலை நடந்தது உண்மை தான். இதற்கு முழுமுதல் காரணம் மத்திய அரசு தான். இது மன்னிக்க முடியாத குற்றம். அப்போது மத்திய அமைச்சரவையில் திமுகவும் அங்கம் வகித்தது. அதை தடுக்க தவறிய அப்போதைய தமிழக அரசும் குற்றவாளி தான் என்று தமிழகம் முழுவதும் பேசினேன்.
இதில் இருந்து ஒரு உண்மை தெரிகிறது. அது என்னவென்றால், ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசு தான் காரணம் என்று தெரிவித்த கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்பது தெளிவாகிறது.
என் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அனைத்தையும் ஆமாம் நான் தான் பேசினேன் என்றேன். இந்த வழக்கில் எந்த தீர்ப்பு கொடுத்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் தான் வந்தேன். நான் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று நீதிமன்றம் உத்தரவு மூலம் தெரிகிறது.
மத்திய அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்ற கருத்து இனி தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படும். சுதந்திர தமிழீழம் மலரும். ஆயுதப்போர் முடிவுக்கு வந்தாலும் மக்கள் இன்னும் ஈழத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த அதே துரோகத்தைத்தான் தற்போது மோடி அரசும் செய்து வருகிறது. இவ்வாறு வைகோ பேசினார்.