முதல்வரோடுதான் விவாதம்... குட்டி குட்டி ஆட்களுடன் அல்ல! ஓ.எஸ்.மணியனுக்கு துரைமுருகன் பதில்
கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசுகையில், நான் சவால் விட்டது முதல்வருக்கு.
ஓ.எஸ்.மணியனுக்கு அல்ல. குட்டி குட்டி ஆட்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் திட்டங்களுக்கு மக்களிடத்திலிருந்து எதிர்ப்பு வருவதை தவிர்க்க முடியாது. ஆண்டாண்டு காலமாக வைத்திருக்கும் நிலங்களை எளிதில் விட்டு
கொடுக்க மாட்டார்கள் யாரும். மக்களிடம் திட்டம் குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். போலீசை வைத்து மிரட்டி நிலம் எடுப்பது முடிமன்னர்கள் காலத்தில்
தான் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், தூத்துக்குடியில் பிரச்னை முடிந்த பிறகும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ராணுவத்தை கொண்டு மக்களின் மன எழுச்சியை அடக்கிவிட முடியாது எனவும் அவர் கூறினார். மேலும், தூத்துக்குடி மற்றும் சேலத்தில் நடைபெறும் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஏன் முன் நின்று நடத்தவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த துரைமுருகன், தன்னெழுச்சியாக மக்கள் நடத்தும் போராட்டங்களை கூட, அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என கூறுவதால் தான், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த தயங்குகிறார்கள் என்று கூறினார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து பேசிய துரைமுருகன், காங்கிரஸ் தலைவரை
பார்ப்பதாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று கூறமுடியாது. புது கம்பெனி ஆரம்பித்தால் அதனுடைய பிராண்டை விளம்பரம் செய்வது போல தான் கமல் தனது கட்சியை விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.