ஓட்டுக்கு பணம் கொடுத்தால் என்ன செய்யணும்? திவாகரன் மகன் ஜெயானந்த் கொடுத்த பலே ஐடியா...
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் என்ன செய்யணும் என பலே ஐடியா கொடுத்துள்ளார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவின் ஒவ்வொரு சொந்தங்கள் ஒவ்வொருவராக கட்சி ஆரம்பிப்பதும், ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து சொல்வதுமாக இருந்த நிலையில், சசிகலா குடும்பத்திலிருந்து கிருஷ்ணப்ரியா, திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் என ஓவ்வொருவராக வெளியில் வந்தனர்.
இந்நிலையில் தினகரன் கட்சி ஆரம்பித்து தனது மகனுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற கடுப்பில் திவாகரன் "அண்ணா திராவிடர் கழகம்" என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் அக்கட்சி சார்பில் மன்னார்குடியில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய திவாகரன் மகன் ஜெயானந்த்; திராவிடக் கட்சிகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. அக்கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான் தமிழர்கள் வடநாட்டுக்கு வேலைக்கு போகவில்லை. ஆனால் அவர்கள்தான் இங்கு வருகிறார்கள்.
தற்போது தமிழக அரசியலுக்கு கேன்சர் வந்துள்ளது. அதாவது ஓட்டுக்கு பணம் என்ற புற்றுநோய் வந்துள்ளது. இதை ஒழிக்க ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முதல் வேட்பாளரை மக்கள் புறக்கணித்து பிடித்து கொடுத்தால் அடுத்து வரும் வேட்பாளர் பணம் கொடுக்க மாட்டார். நம்ம மக்கள் கிட்ட அறியாமை அதிகமாக உள்ளது. நிலைமை இப்படியே போனால் நம் சந்ததிக்கு கள்ளாபெட்டியை கொடுக்க முடியாது. சவப்பெட்டியைதான் கொடுக்க முடியும் என்றார்.