divakaran press meet at mayladudurai

கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ததையும்அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதையும், அமைச்சர்கள் வரவேற்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழிசையை முதலமைச்சராக்க பாஜக வினர் நாடகம் நடத்துகிறார்களா ? என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் சசிகலா உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்தது. மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது..

இது குறித்து விளக்கமளிக்க, வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாள்களிடம் பேசிய திவாகரன், எங்கள் குடும்பத்தினர் மீது நடந்த வருமான வரிச் சோதனை தோல்வியில் முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.

 எங்களை மிரட்டிப் பணியவைக்கவே இந்த சோதனை என்றும் எங்கள் உயிர் உள்ள வரை இது போன்ற அடக்குமுறைகளால் எங்களை பணிய வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எங்களது அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் இப்போதும் எங்களுடனேயே இருக்கின்றனர் என்றும் திவாகரன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் , ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை அமைச்சர்கள் வரவேற்றிருக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்க்கும்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்க ஒத்திகை நடப்பது போலத் தெரிகிறது என கூறினார்.

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தங்களது பதவியைக் கூட விட்டுக் கொடுத்து விடுவோர்களோ என தனக்கு தோன்றுவதாக குறிப்பிட்டார். பேசாமல் அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்றும் திவாகரன் தெரிவித்தார்.