தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் டிடிவி அவசர ஆலோசனை.... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் கலைசெல்வன், பிரபு, தங்கதமிழ்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வெற்றிவேல், கலைசெல்வன், பிரபு, தங்கதமிழ்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சசிகலா கைதாகி சிறைக்கு சென்ற பிறகு டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதற்கிடையில் ஆளுநரிடம் முதல்வர் குறித்து மனு கொடுத்ததாக தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. தற்போது தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த காரணத்தால், 18 சட்டமன்ற தொகுதிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசின் எந்தவித சலுகைகளும், திட்டங்களும் தங்கள் தொகுதிக்கு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். பல மாஜி எம்.எல்.ஏக்கள் இதற்காக போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில், அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் டிடிவி.தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 18 மாஜி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏக்களின் மீதான தகுதி நீக்க வழக்கு குறித்தும், 18 தொகுதிகளிலும் அரசின் எந்த ஒரு திட்டமும் முறையாக சென்றடையவில்லை. எனவே, அரசின் திட்டங்கள் தொகுதிகளுக்கு கிடைக்க வேண்டும். இதை வலியுறுத்தி 18 தொகுதிகளிலும் போராட்டம் நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.