dindukkal seenivasan express his comment over governor inspection in coimbatore

இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அப்படியே கோவை மாநகரில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிடம் கோவை மாநகர் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி, குப்பை கூட்டி பேட்டியும் அளித்தார். 

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பெரும் குரலெடுத்து கண்டித்தனர். அத்துடன், ஆளும் கட்சி உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா, மாநில சுயாட்சிக்கு எதிராக இது இருக்கிறதே என்று மூன்றாம்தர கருத்துக்களையெல்லாம் கூறிய போது, ஆளும் கட்சி தரப்பில், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர்கள் கூறினர். 

எல்லாவற்றிலும் வித்தியாசமாகவே சிந்தித்து, சொல்லிப் பழகிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த விவகாரத்திலும் தனது வித்தியாசமான கருத்தை பதிவு செய்துள்ளார். 

ஆளுநர் ஆய்வு நடத்தியதை ‘டேக் இட் ஈசி’ ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதுதான் இன்றைய ஹைலைட்.

கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம் ஆளுநர் ஆய்வு குறித்து என்ன கருதுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட ஆளுநர் ஆய்வு நடத்தியிருந்தால் தவறில்லை... ஆளுநர் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்தாலும் வரவேற்புக்குரியது. ஆளுநர் ஆய்வு நடத்தியதை ‘டேக் இட் ஈசி’ ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அவருடைய நகைச்சுவையான பதில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, உடன் இருந்தவர்களுக்கும் சற்று உசுப்பித்தான் விட்டது.