"விரைவில் இரு அணிகளும் இணையும்" – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி!
திருவண்ணாமலையில், வரும் 29ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்படுகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது 100 சதவீதம் உறுதியான தகவல்தான். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். அவரும் பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.