Dinakaran warns ministers regards against people
மக்களை பகைத்துக் கொண்டால் கல்தா கொடுத்து விடுவேன் என்று, தினகரன் விடுத்த எச்சரிக்கையால் அமைச்சர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
ஆர்.கே.நகரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று, பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகிறார் தினகரன்.
அதன் ஒரு பகுதியாக, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், காமராஜ், கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றும் அவரால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று தினகரன் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், அவர்களில் சிலர், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய படுத்துகின்றனர் என்று தொகுதி மக்கள் தினகரனிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த தினகரன், சொன்ன வேலையை செய்து கொடுங்கள். இப்போது இருக்கும் நிலைமையை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்று கூறி உள்ளார்.
மேலும், ஒரு சில அமைச்சர்களை அழைத்து, உங்களுக்கு அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால், கடினமாக உழைக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

தொகுதிக்குள் இன்முகத்துடன் இருக்க வேண்டும்.. மக்களை பகைத்து கொள்ளக் கூடாது. முடிந்தால் பாருங்கள், இல்லை என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நேரடியாகவே கூறி உள்ளார்.
இதனால் அந்த குழுவில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் அப்செட் ஆகி உள்ளனர். குறிப்பாக, செல்லூர் ராஜு அதிக அப்செட்டில்இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
