டிடிவி தினகரன் கூடாரம் விரைவில் காலியாகிவிடும்; எம்.பி. வசந்தி முருகேசன்
தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்து வருவதாகவும், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் டிடிவி கூடாரம் காலியாகிவிடும் என்றும் அண்மையில் டிடிவி அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு தாவிய தென்காசி தொகுதி எம்.பி. வசந்தி முருகேசன் கூறியுள்ளார்.
எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லையில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருவது, அவரால் உருவாக்கப்பட்ட சிலருக்கு இன்னும் பிடிக்கவில்லை என்று கூறினார்.
எப்படியாவது ஆட்சியை கலைப்போம் என்று கூறி வருவதுடன் அம்மாவின் ஆட்சியை அகற்ற வேண்டுமென கூறிவரும், வஞ்சக கூட்டத்துடன் அந்த கூட்டமும் இணைந்துள்ளதை வெட்ட வெளிச்சமாக காண முடிகிறது என்றார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழழவை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆனால், டிடிவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை கடைக்கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விரக்தியின் உச்சத்தில் டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம், அதிமுக அம்மா மற்றும் புரட்சி தலைவி அம்மா இணைந்துள்ள அணிகளுக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் தினகரன் கூடாரம் காலியாகிவிடும் என்றும் எம்.பி. வசந்தி முருகேசன் கூறினார்.