மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி..! தினகரன் கிண்டல்..!
தனது உழைப்பாலும் மக்களின் ஒருமித்த ஆதரவோடும் பழனிசாமி முதல்வர் ஆனார் என பழனிசாமியை தினகரன் கிண்டல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினரும் முதல்வர் பழனிசாமி அணியினரும் காரசாரமான வாதங்களை முன்வைத்து வருகின்றனர். வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே அதற்குள் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், முதல்வர் பழனிசாமியை கிண்டல் செய்தார்.
நாட்டில் எது நடந்தாலும் பரவாயில்லை; ஆனால் நாட்களைக் கடத்த வேண்டும் என்றுதான் தமிழக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்றார்.
தனது உழைப்பாலும் தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. அவர், சுயமாக முதல்வர் ஆனார் என முதல்வர் பழனிசாமியை கிண்டல் செய்யும் தொனியில் தினகரன் பேசினார்.