கொள்ளையடித்த பணத்தை வைத்துதான் தினகரன் புதிய கட்சி தொடங்கி உள்ளாராம் - சொன்னவர் திண்டுக்கல் சீனிவாசன்...
திண்டுக்கல்
டி.டி.வி.தினகரன் கொள்ளையடித்த பணத்தை வைத்து புதிய கட்சி தொடங்கி உள்ளார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: "கழக நிர்வாகிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.
தற்போது, கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும்.
கட்சிக்காக உழைத்து ஜெயிலுக்கு சென்றவர்களுக்கே கட்சியில் பதவி கிடைக்கும். பணம் இல்லையென்றால் தேர்தல்களில் ஒன்றும் செய்ய முடியாது. அனைவரும் பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்க வேண்டும்.
டி.டி.வி.தினகரன் கொள்ளையடித்த பணத்தை வைத்து புதிய கட்சி தொடங்கி உள்ளார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல அவரிடம் இருந்து நாஞ்சில் சம்பத் விலகி சென்றுவிட்டார்.
ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும். இதற்காக, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்களுக்கு அதன் பாதிப்பு தற்போதுதான் தெரிகிறது" என்று அவர் பேசினார்.