dinakaran speaks about assembly and lok sabha election
தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடந்துவருவதாகவும் இந்த ஆட்சியின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியே வரும் என தினகரன் எச்சரித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி கண்ட தினகரன், அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பதை இலக்காக கொண்டு அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருகிறார்.

ஆளும் அதிமுக அரசை பிரதான எதிர்க்கட்சியான திமுகவைவிட தினகரன் கடுமையாக எதிர்ப்பதோடு விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஊழல் நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்.

மக்களவை தேர்தலுடன் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலும் வரும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்து அவர் அறிவித்த திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
