dinakaran says that he will meet sasikala for the next move
இரட்டை இலை விவகார வழக்கை சட்டப்படி சந்திப்பேன் எனவும் சசிகலாவை சந்தித்த பிறகே கட்சி குறித்து அடுத்தகட்ட முடிவு எடுப்பேன் எனவும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டார்.

அவரிடம் போலீசார் விசாணை நடத்தியபோது அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையை அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை விசாரணை நடத்தினர். பின்னர், ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி தினகரனும், மல்லிகார்ஜூனாவும், டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பின்னர், இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தியாளருக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் இரட்டை இலை விவகாரத்தில் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் எனவும் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பிறகே கட்சியில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
