dinakaran retaliation to kamal
கமலின் வயதிற்கும் அவரது அனுபவித்திற்கும் தகுந்த மாதிரி அவர் பேசவில்லை. மக்கள் மீது குற்றம் சுமத்தும் கமல், அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என தன் வெற்றி குறித்த கமலின் விமர்சனத்திற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றியை, வார இதழ் ஒன்றுக்கு எழுதும் தொடரில் கமல் விமர்சித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகப்பெரிய களங்கம். ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட களங்கம். ஆர்.கே.நகர் வெற்றி வாங்கப்பட்ட வெற்றி. அதற்கு மக்களும் உடந்தை என கமல் விமர்சித்திருந்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கமலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற என்னை விமர்சனம் செய்வதாக நினைத்து கமல், ஆர்.கே.நகர் மக்களை விமர்சித்துள்ளார். இது அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதைக்கும் சரியான செயல் அல்ல. சினிமாவில் எழுதிக்கொடுத்து பேசும் வசனம் போல கமல் பேசியிருக்கிறார்.
பணத்திற்காக மக்கள் வாக்களித்திருந்தால், ஆர்.கே.நகரில் இரட்டை இலை தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசின் மீதான அதிருப்தியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக ஆர்.கே.நகர் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தலைமையில் செயல்படும் நாங்கள்தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர்.
டோக்கனை நம்பியா மக்கள் வாக்களிப்பார்கள்? ஆர்.கே.நகரில் எனது வெற்றியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் மக்களை குற்றம்சாட்டுகின்றனர். கமலுக்கு அரசியல் தெரியவில்லை. சினிமா வசனம் போல பேசியிருக்கிறார். மக்களை குற்றம்சுமத்தும் அவர், அரசியல் பற்றி தெரியாமல் அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியுமா? என தினகரன் பேசியுள்ளார்.
