dinakaran on the way to secretariat with open vehicle
ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இன்று காலை சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். பின்னர், நேராக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் அறைக்குச் சென்றார்.
அவர் தனி ஒருவனாக வரவில்லை. ஒரு பெருங்கூட்டம். அரசியல்வாதிகள் எல்லோரும் மூக்கில் விரலை வைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது இதன் பின்னணி. சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்றத்துக்குள் முதல்முதலாக நுழையப் போகும் ஆவல் மட்டுமல்ல, ஒரு கட்சியையே தன் கைக்குள் கொண்டு வர வைக்கும் உத்வேகத்துடன் உள்ளே நுழைந்துள்ளார் தினகரன்.

அப்படி நுழைந்தவருக்கு தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாம் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டதற்கான உறுதிமொழியைக் கூறினார் தினகரன்.
அறைக்கு வெளியிலும் உள்ளேயும் தினகரன் ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அங்கு மட்டுமல்ல, கடற்கரைச் சாலையில் வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். குறிப்பாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள், தினகரனால் நியமிக்கப் பட்ட மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் டிடிவி தினகரனுக்காகக் காத்திருந்தனர்.

திறந்த வாகனத்தில் வந்த தினகரன், ஆதரவாளர்களின் கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார். பேசினார். ஆரத்தித் தட்டுகளுடன் காத்திருந்த பெண்களுக்கு காசுகளை அள்ளி வீசினார். தினகரனின் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் கடற்கரைச் சாலை முழுதும் அங்கங்கே மக்கள் கூட்டம்தான்! குறிப்பாக, கலங்கரை விளக்கம், ஐஜி அலுவலகம், ஆலிண்டிய ரேடியோ ஆகிய பகுதிகள் தொடங்கி, கடற்கரைச் சாலை முழுதும் சட்டப்பேரவை வளாகம் செல்லும் வழி நெடுகிலும் ஆங்காங்கே பெண்கள் பலர் காத்திருந்தனர். ஆரத்தி எடுத்து, முதல்முதலாக சட்டசபைக்குச் செல்லும் தினகரனுக்கு வாழ்த்தி வழி அனுப்பினர்.

இப்படி கூடிய கூட்டத்துக்கு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.200 முதல் ரூ.500 வரையும் சாப்பாடும் கொடுக்கப்பட்டதாக வந்திருந்த பலர் பேசிக் கொண்டனர். தினகரன் முன்னர் 1999 முதல் 2004 வரை பெரியகுளம் மக்களவை உறுப்பினராக இருந்தவர்தான். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். அதற்காகத்தான் இந்த தடபுடன் ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், அவரது நடவடிக்கைகளும், செய்தியாளர் சந்திப்பும் ஒரு கோமாளித்தனத்தை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்வுகளைப் பார்த்த சிலர் வெளிப்படையாக விமர்சிப்பதைக் கேட்க முடிந்தது.
இனிமேல் தான் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தினகரனின் செய்தியாளர் சந்திப்பு இன்னும் பல செய்திகளைச் சொல்லுகிறது.
